Header Ads

மேயரின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்: கோரிமேடு பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் காரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.வெயில் ஆரம்பித்து சில நாட்களிலேயே பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் குடிநீர் கிடைக்க தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மின்தடை, பராமரிப்பு பணிகள் காரணமாக சில நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும்.
சேலம் கோரிமேடு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் புகாராகும். சேலம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ராமச்சந்திரன் போட்டியிட்ட வார்டில் இந்த கோரிமேடு பகுதி உள்ளது.



இன்று காலையில் ஏராளமான பொதுமக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்து மேயர் ராமச்சந்திரன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவரின் காரை சிறைபிடித்த பொதுமக்கள், குடிநீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக மேயர் ராமச்சந்திரனிடம் கூறினார். வாரத்தில் 2 நாட்களாவது தடையின்றி தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தனர்.

மாநகராட்சி அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேயர் ராமச்சந்திரன் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உத்தரவிட்டார். லாரிகள் மூலம் உடனடியாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேயரின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

No comments