Header Ads

சேலம் புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் சிறப்புரை.

சேலம் புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மை விருந்தினராக பங்கேற்று நாட்டுப்புறவியல் குறித்து கருத்துரையாற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக கொளத்தூர் பா.வைரவேல் அவர்களும் கருத்துரையாற்றினர்.நிகழ்ச்சிக்கு அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் வள்ளி சத்யமூர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எண்ணற்றோர் பங்கேற்றனர்.


எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசும்போது,வட்டார வழக்கு மொழியில் நாட்டுப்புறவியல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. பண்டைய காலம் முதல் சொலவடை அதிகம் பேசப்பட்டு வந்துள்ளது, சங்க இலக்கியங்கள் காலம் முதல் தற்போதைய காலம் வரை சொலவடை மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு இருந்துள்ளது.


 பேச்சு வழக்கில் இருக்கும் சொற்கள் கொச்சை சொற்கள் இல்லை அது மக்கள் பேசும் மொழி எனவும் தமிழ் மொழி நீண்ட நெடிய அந்தஸ்தை பெற்றுள்ளது,ஆனால் தமிழகத்தில் இன்று தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய ஆறு மொழிகளில் நான்கு மொழிகள் எழுத்து வடிவம் பெறாத நிலை உள்ளது. அதிலும் சமஸ்கிருதம் மக்கள் அதிகம் பயன்படுத்தாத மொழியாக இருக்கிறது. ஆனால் தற்போது மொழியை வைத்து அரசியல் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.


 தமிழ் மொழி மக்கள் வழிபடும் கோவிலுக்கு உள்ளே செல்லவில்லை எனவும், தமிழ் மொழியை வளர்ப்பதாக கூறும் இன்றைய ஆட்சியாளர்கள் அதிலும் ஒன்றிய ஆட்சியாளர்கள் காசிவரை எடுத்து சென்றாலும் அந்த தகவலை தமிழக முதல்வருக்கு கூட தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழை மொழி சார்ந்த அரசியலாக மாற்ற நினைக்கிறார்கள். பக்தி இலக்கியம் பண்டைய காலம் முதல் இருந்து வந்தது. அதற்காக ஒட்டுமொத்த இலக்கியமும் பக்தி இலக்கியமும் அல்ல என தெரிவித்த அவர்கள் சங்க இலக்கியத்தில் பக்தி இலக்கியத்திற்கு ஓர் இடம் இருந்தது.


  சிலர் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும் என விரும்புகின்றனர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் வஞ்சிரா வழக்கு மிக முக்கியமான ஒன்று. சமஸ்கிருதம் தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கதை நடந்துள்ளது. வில்லங்கங்கள் அனைத்தும் குஜராத்தில் இருந்து தான் வருகிறது என விமர்சித்தார்.

குஜராத் வஞ்சிரா வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு தொடர்ந்த உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா என கேட்டார். அதற்கு வழக்கு தொடர்ந்தவர் தனக்கு சமஸ்கிருதம் தெரியாது என தெரிவித்த நிலையில் வழக்கு தொடர்ந்த உங்களுக்கே சமஸ்கிருதம் தெரியாது என்றால் ஏன் சமஸ்கிருதம் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என நீதிபதி விமர்சனம் செய்த சூழலும் இந்தியாவில் அரங்கேறி உள்ளது.


 தமிழ் மொழி தென்னிந்தியாவில் தனித்து பேசப்படும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மொழியாக கருதப்படுகிறது. கால்டுவெல் சிறந்த புத்தகத்தை இயக்கியுள்ளார். 75 தென்னிந்திய மொழிகள் தனித்த மொழிகள் ஐரோப்பிய மொழிகளுக்கு தொடர்பு உள்ளது எனவும், இலக்கணத்தை வைத்து அனைத்தும் கணிக்கப்படுவதாக தெரிவித்தார்.


நாம் திராவிட குடும்பத்தில் உள்ளோம் எனவும் மொழியால் குடும்பமாக இருக்கிறோம் இனத்தால் அல்ல எனவும் தெரிவித்தார். டோனி ஜோசப் அவர்கள் எழுதிய ஆதி இந்தியர்கள் புத்தகத்தில் இந்தியர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என என கூறியுள்ளதாக தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.


 மனிதர்களின் இருள் போக புத்தகத்தை படித்தால் போதும். இருளும் ஓடிவிடும் என தெரிவித்த அவர், அறிவின் வெளிச்சம் வகுப்பறையில் உருவாகி வெளிச்சமாக மாற வேண்டும். கல்வியில் கேள்விகளோடு உள்ள கல்வி தேவை எனவும் ,தமிழகத்தில் தற்போது கல்வியில் பெரிய அளவில் மாற்றம் நடைபெற்று வருவது மகிழ்ச்சியை தருகிறது எனவும் தெரிவித்தார்.


மக்கள் பேசும் பேச்சு வழக்குகளை ஏளனப்படுத்த கூடாது என தெரிவித்த அவர், தமிழ் தாய்க்கு பலமுகம் உள்ளது .எல்லா முகமும் சேர்ந்ததுதான் தமிழ் மொழி என தெரிவித்தார். மேலும் பேச்சுத் தமிழ் கொண்டாடப்பட வேண்டும் எனவும், எழுத்தாளர்கள் எழுத்தை பாதுகாக்கின்றனர் .புரட்சி என்ற சொல்லை உருவாக்கியவர் பாரதி. அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பெயரை பாரத ஜன சபை என எழுதியவர் பாரதி என தெரிவித்தார் .


மொழியை மத அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் பக்தி இலக்கியத்தை மட்டும் வைத்து தமிழ் மொழி வளரவில்லை தமிழ் மொழி பல முகங்களை கொண்டு செம்மொழியாக வளர்ந்து உள்ளது. தமிழை பாதுகாப்போம் அதோடு நாட்டுப்புற இலக்கியத்தை வளர வைத்து தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்போம் என தெரிவித்தார்.

No comments